பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரம் கிலோ பழங்கள், காய்கறிகள், பூக்களால் அலங்கார பந்தல் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை சரநாராயணபெருமாள் கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் சன்னதி, முகப்பு மண்டபம் ஆகிய இடங்களில் பல்வேறு நகரங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆப்பிள், திராட்சை, மாதுளை, மா, பலா, வாழை, கொய்யா உள்ளிட்ட ஒரு டன் (ஆயிரம் கிலோ) பழ வகைகள் மற்றும் காய்கனி, வாசனை மலர்களால் பழப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பழப்பந்தலில் மூலவர் சரநாராயணபெருமாள் பழப்பந்தலில் புல்லாங்குழல் கண்ணனாக சிறப்பு அலங்காரத்திலும், உற்சவர் கண்ணாடி அறையில் தாயாருடன் எழுந்தருளியும் அருள்பாலித்து வருகிறார். இதில் கடலூர், புதுவை, விழுப்புரம் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.